Sunday 14 October 2012

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் - அரிதினும் அரிய உண்மைகள்!


ஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு.
நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகும் எவ்வித குறைகளும் இன்றி நலமுடன் வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது. காரணம், நீங்கள் செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். நீங்கள் அவற்றை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும்.

பலரின் வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்படும் காரணம் இந்த பித்ரு சாபம் தான். 

அப்படிப்பட்டவர்கள், இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் சொன்னா நான் என்ன பண்ணுவேன் என்று எவரும் கலங்க வேண்டியதில்லை. கீழே தரப்பட்டுள்ள முழு கட்டுரையையும் படியுங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் அடுத்த முறை, நன்கு திட்டமிட்டு மனநிறைவோடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.

இன்றைய தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் மிக மிக அற்புதமான கட்டுரை இது. படியுங்கள். பயன்பெறுங்கள்.

மஹாளயம் என்னும் மகத்தான் நாள் !

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோருகளுக்கு (பித்ருக்களுக்கு) வழிபாடு செய்கிறோம்.

பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

மஹாளய பட்ச அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

பித்ருக்களுக்கு விசேஷ தினம்

பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.

7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்

மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

சூரியோதய நேரத்தில் அமாவாசை

தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எல், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.

சூரிய, சந்திரர்கள் 12 டிகிரிக்குள் ஒருங்கிணையும் நாள் தான் அமாவாசை ஆகும். இந்த ஆண்டு நாளை திங்கட்கிழமை காலை சூரியோதய நேரத்தில் அமாவாசை இருப்பது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. 'அமாசோமவாரம்' என்று கூறப்படும் இந்த நேரத்தில் அரசமரத்தை வளம் வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன், என்னும் மும்மூர்த்திகளில் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மஹாளய அமாவாசையான நாளைய தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம்.

(நன்றி: தினத் தந்தி 14/10/2012)

No comments:

Post a Comment